விடியல் பேருந்து வெற்றி தந்ததா? பேருந்து பற்றாக்குறைக்கு யார் காரணம்? சர்வே தந்த அதிர்ச்சி!
சென்னை: இலவச பேருந்து திட்டத்தால் பெண்கள் மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடிகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
கட்டணமில்லா மகளிர் பேருந்து அரசுத் திட்டம் குறித்து சிஏஜி நுகர்வோர் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த சர்வே பல மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அந்த ஆய்வில் ஒரு அங்கமாகச் செயல்பட்ட மூத்த ஆய்வாளர் சுமனா பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த இலவச பேருந்து திட்டத்தால் என்ன நன்மை? நடந்த மாற்றம் என்ன?
அதற்குப் பதிலளித்த சுமனா, "இந்த சர்வேவை 6 நகரங்களிலிருந்தே எடுத்துள்ளோம். சென்னை, கோயம்புத்தூர்,சேலம், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகியவை அதில் அடங்கும்.

எங்கள் ஆய்வில் மிகப்பெரிய நகரங்கள் கூடவே இரண்டாம் நிலையில் உள்ள நடுத்தர நகரங்கள், மிகவும் பின்தங்கிய நகரங்கள் என அனைத்தையும் உள்ளே கொண்டுவர வேண்டும் என நினைத்தோம். அதனால், இந்த மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்தோம்.
மேற்சொன்ன நகரங்களில் வாழும் 500 பெண்களிடம் இந்த இலவச பேருந்து திட்டத்தால் என்ன நன்மை என்பது குறித்த பல கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் அதற்கு அளித்த பதில்களைச் சேகரித்தோம்.
அதனால் அவர்களுக்குக் கிடைத்த இலாபம் என்ன? ஏதேனும் சேமிப்பு செய்ய முடிந்ததா? அப்படிச் சேமிக்க முடிந்த பணத்தை என்ன வழிகளில் செலவழித்தார்கள்?
இதை எல்லாம் தாண்டி வேறு வழிகளில் இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுத்துள்ளதா? அப்படி என்றால் அது என்ன மாதிரியான மாற்றம்?

சிலர் வேலைவாய்ப்பு தேடுவதற்கு இது ஒரு உதவியாக இருந்தது என்று சொன்னார்கள். ஒரு வேலை தேட வேண்டும் என நான்கு இடங்களுக்குச் செல்லும் போது பணமே இல்லாமல் போய் வர முடிந்தது. அதனால் உதவிக்கரமாக இருந்தது என்று சொன்னார்கள்.
சில பேர் தினம் படிப்பதற்காக வகுப்புகளுக்குப் போவதற்கு உதவியாக இருக்கிறது என்றார்கள். இப்படி நாங்கள் எடுத்த ஆய்வில் பலவிதமான பதில்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாங்கள் சர்வே செய்வதற்காகப் பேசிய பெண்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான மகளிர், ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது என்கிறார்கள். அந்தப் பணத்தை குடும்ப உணவுத் தேவைக்கும், பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னார்கள்.

இந்த இலவச பேருந்து விடுவதற்கு முன்பு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் வேலை கிடைத்தால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் சம்பாதிக்கும் பணம் போக்குவரத்து செலவுக்கே பாதி போய்விடும். ஆகவே அதைத் தவிர்த்துவிடுவோம்.
ஆனால், இப்போது இலவச பேருந்து வசதி இருப்பதால் தூரம் ஒரு பிரச்சினை இல்லை. எவ்வளவு தூரம் இருந்தாலும் இலவசப் பேருந்து வசதி உள்ளதால் அந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதாகச் சொன்னார்கள். இது ஒரு முக்கியமான மாற்றமாக எங்களுக்குத் தெரிந்தது.
முன்பு சில பெண்கள் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்டு வேலைக்குச் சென்றுவந்துள்ளனர். அதனால் அதிக செலவு செய்ய வேண்டி இருந்துள்ளது. இப்போது இலவச பேருந்து என்பதால், வண்டியில் செல்வதைத் தவிர்த்து பேருந்தில் பயணிப்பதாகச் சொன்னார்கள்.
அதுவும் ஒரு முக்கிய விசயமாக இந்த வாக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. ஏனெனில் தனி வாகனங்களைத் தவிர்த்து பொது வாகன வசதிகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.
பலர் இந்த வாக்கெடுப்பில் வைத்த கோரிக்கை பேருந்து பற்றாக்குறை என்பதைத்தான். சரியான நேரத்திற்குப் பேருந்து கிடைப்பதில்லை என்றார்கள்.

உதாரணமாகச் சென்னையில் எம்டிசி பேருந்துகள் மொத்தம் 3400 தான் உள்ளன. ஆனால் மத்திய அரசின் தரவு என்ன சொல்கிறது என்றால் ஒரு லட்சம் பேர் வாழும் ஒரு பகுதியில் சுமார் 60 பேருந்துகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படிப் பார்த்தால், சென்னை மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்து வசதிகள் இல்லை. ஆகவே, அதை அரசு அதிகப்படுத்த வேண்டும்.
மக்கள் வைத்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். எம்டிசிக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். அவர்கள் பேருந்து வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பதிலளித்துள்ளார்கள். அது எவ்வளவு வேகம் நடக்கும் என்பதைப் பொறுத்துத்தான் மாற்றம் வரும்" என்கிறார்












Click it and Unblock the Notifications