அம்மா மருந்தகங்கள் மூடப்படுகிறதா?.. தமிழக அரசு விளக்கம்.. எடப்பாடி குற்றச்சாட்டுக்கு பதிலடி!
சென்னை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்து மாத்திரைகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூட முயற்சி செய்வதாக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் 20-11-2021 தேதியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ் நாடு அரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது.

கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-லிருந்து 131-ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.
அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம்- 2, திண்டுக்கல் மாவட்டம் - 2, சென்னை மாவட்டம்- 4, ஈரோடு மாவட்டம்- 2, மதுரை மாவட்டம்- 2, தேனி மாவட்டம்- 2, திருநெல்வேலி மாவட்டம்- 2, திருவள்ளுர் மாவட்டம்- 2, வேலுர் மாவட்டம்- 2,
இராணிப்பேட்டை மாவட்டம் -2 செங்கல்பட்டு மாவட்டம்- 2, இராமநாதபுரம் மாவட்டம்- 2,
திருச்சி மாவட்டம்- 2, காஞ்சிபுரம் மாவட்டம்- 2, விருதுநகர் மாவட்டம்- 2, தஞ்சாவூர் மாவட்டம்- 2,
கன்னியாகுமரி மாவட்டம்- 2, மயிலாடுதுறை மாவட்டம்- 2

பெரம்பலுர் மாவட்டம்- 2, சிவகங்கை மாவட்டம்- 2, அரியலுர் மாவட்டம்- 2, கடலுர் மாவட்டம்- 2
தருமபுரி மாவட்டம்- 1, கிருஷ்ணகிரி மாவட்டம்- 2, நாகப்பட்டினம் மாவட்டம்- 2, நாமக்கல் மாவட்டம்- 1,
சேலம் மாவட்டம்- 2, திருப்பூர் மாவட்டம்- 2, திருவண்ணாமலை மாவட்டம் - 2, விழுப்புரம் மாவட்டம்- 2,
கள்ளக்குறிச்சி மாவட்டம்- 2, திருவாரூர் மாவட்டம்- 2, துத்துக்குடி மாவட்டம்- 2, தென்காசி மாவட்டம்- 2,
திருப்பத்துர் மாவட்டம்- 2, கோவை மாவட்டம்- 2, கரூர் மாவட்டம்- 2, நீலகிரி மாவட்டம்- 1, மொத்தம் - 75
131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ-48.21 கோடிக்கு விற்பணையாகியுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது.
மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications