பெண் குழந்தைகள் பாதுகாப்பு.. பள்ளிகளுக்கு பறந்த முக்கியமான உத்தரவு.. அசத்தும் பள்ளிகல்வித்துறை!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10-ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
மிரட்டல்; உருட்டல்.. எல்லை மீறிய தனியார் நிதி நிறுவன குண்டர்கள்.. விவசாயி தற்கொலை.. ராமதாஸ் வேதனை..!
ஆலோசனை
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்னும் வகுப்புகள் தொடங்கவில்லை. 1 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
முக்கியமான அறிவிப்பு
இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் 1 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிகல்வித்துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குழு அமைக்க வேண்டும்
இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும்.
புகார் பெட்டி
மேற்கண்ட குழுவில் இடம் பெற்று இருப்பவர்கள் வாரத்தில் ஒருநாள் பள்ளிகளுக்கு சென்று இந்த புகார் பெட்டியை ஆய்வு செய்ய வேண்டும். இதில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் இருந்தால், அதை காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் மகளிர் காவல் நிலையத்தின் தொடர்பு எண்கள் இடம்பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.