முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே 'சரக்கு'.. டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சென்னை: முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான் மதுபானங்கள் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,000-த்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 20 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். தமிழகத்திலும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனாவைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜனவரி 31-ந் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

வழிபாட்டு தலங்களில் அனுமதி மறுப்பு
ஜனவரி 14-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரத்தில் குடிகாரர்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகிற டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான கட்டுப்பாடுகள் இதுவரை அறிவிக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு
தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

முக கவசம் கட்டாயம்
மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் முக கவசம், கையுறை அணிவது அவசியம். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுவகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு டாஸ்மாக் கடைகளுக்கான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications