100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதி- பொதுமக்கள் ஆதரவும் எதிர்ப்பும்
சென்னை: 100% இருக்கைகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் ஒன் இந்தியா தளத்துக்கு பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள்:

ஆனந்தகிருஷ்ணன், கோவை
திரையரங்குகள், மால்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகளில் பழைய படங்கள்தான் போடப்பட்டன. ஆனாலும் பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் சென்று வந்தனர். அதனால் திரையரங்குகளில் கூட்டம் இருக்கவே செய்தது.
பொங்கலுக்கு விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகின்றன. இதனால் நிச்சயம் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அதேநேரத்தில் கொரோனா தொற்று-2 வேகமாக பரவுகிறது. குறிப்பாக இளைஞர்களை இந்த புதிய கொரோனா தாக்குகிறது என்கின்றனர்.
ஒருவருக்கு பாதிப்பு எனில் 100க்கும் அதிகமானோரை தாக்குகிறது என்கிற சூழலில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை இயங்க அனுமதிப்பது சரியாகப்படவில்லை.
அக்ஷயா, கோவை
பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர் படல் ரிலீஸ் ஆகிறது. இதனால் தியேட்டர்களில் நிச்சயம் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். முககவசம் அணிவது போன்றவற்றை கட்டாயப்படுத்த முடியாத நிலை வரும். இதனால் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது. அதனால் 100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்காமல் இருப்பதுதான் நல்லது.
அபிஷேக், கோவை:
பொங்கலுக்கு புது படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் கொரோனா அதிக அளவில் பரவக் கூடும். இப்போதைக்கு திரையரங்குகளை திறக்காமல் இருந்தால் போதும். அதுவும் புதுவகை கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் நிலையில் தியேட்டர்களை முழுமையாக திறப்பது சரியாகப்படவில்லை.
முகமது அசாருதீன், தஞ்சாவூர்
100% இருக்கைகளுடன் தியேட்டர்களை இயங்க அனுமதித்தால்தான் அதை நடத்துகிறவர்கள், மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதால் நடத்துகிறவர்களுக்கு நட்டம்தான். நான் எல்லாம் படம் பார்த்தே 6 மாதமாகிவிட்டது. அனைவரும் முக கவசங்கள் அணிந்து 75% 80% அளவுக்கு இருக்கைகளுடன் தியேட்டர்களை அனுமதிக்கலாம். திரையரங்கங்களில் முன்பதிவு முறையை கட்டாயப்படுத்தலாம். தியேட்டர் உரிமையாளர்கள் 10 மாதமாக பிழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். உரிய கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை நடத்தலாம்.
வீரமணி, தஞ்சாவூர்:
100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதித்திருப்பது நல்ல விஷயம்தான் வரவேற்கத்தக்கதுதான். சமூக இடைவெளி பின்பற்றனும்; சானிடைசர் பயன்படுத்தனும். கட்டாயம் முக கவசம் அணிந்துகொண்டு போகனும். இந்த மாதிரி கட்டுப்பாடுகளுடன் இருந்தால் தியேட்டர்களுக்கு போகலாம்.
சரத், தஞ்சாவூர்
நான் விஜய் ரசிகர். 100% இருக்கைகள் பயன்படுத்த அரசு அனுமதித்திருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை இன்னமும் தளர்த்தனும். அப்படி செய்தால்தான் ரசிகர்கள் நாங்கள் கொண்டாட முடியும்.
முகமது நபீல், தஞ்சாவூர்
தியேட்டருக்கு நாம் வரும்போது மாஸ்க் அணிந்து கொண்டு, கைகளை சுத்தம் செய்து கொண்டு வரனும். மற்றவங்களுக்கு எந்த வியாதியையும் பரப்பிவிடாமல் இருக்கனும். எல்லோரும் இதை மனதில் வைத்துக் கொண்டால் நல்லது. நாம் நம்மை பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு தியேட்டர்களுக்குப் போகலாம்.
சையத் அபுதாஹீர், தஞ்சாவூர்
அரசு என்ன சொல்கிறதோ அதை அனைவரும் முழுமையாக செய்துவிட்டு தியேட்டருக்குள் போகனும். கொரோனாவுக்கு முன்னர் செய்தது போல கும்பலாக கொண்டாடிகிட்டு இருந்தால் கொரோனா தொற்று அதிகமாகத்தான் ஏற்படும். கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவிப்பது போன்றவற்றை பின்பற்றனும். தியேட்டர்களை நம்பி பலரது வாழ்வாதாரம் இருக்கிறது. அவர்களும் பிழைக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் கொரோனாவும் ஒழியும்.












Click it and Unblock the Notifications