6 மாதம் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: 6 மாதமாக வங்கியில் ஓய்வூதியத்தை எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் "ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்.. டிக்டாக்கை அடுத்து அலிபாபாவிற்கும் அதிரடி செக்!
நிறுத்திவைக்க உத்தரவு
ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிர்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும்.
கணக்காயத் தலைவா் தகவல்
கணக்காயத் தலைவா் தகவல்: கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் கணக்காயத் தலைவா் தனது அறிக்கையில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டி வருகிறார். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.. மேலும், ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக்காயத் தலைவா் தனது அறிக்கைகளில் கூறியுள்ளார்.
ஆறுமாத காலம் பயன்படுத்தாதவர்கள்
இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும்.
கடிதத்தில் தகவல்
ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென தனது கடிதத்தில் சமயமூா்த்தி வலியுறுத்தியுள்ளார்.
அரசின் அறிவிப்பு
கொரோனா பிரச்சனை காரணமாக வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இப்படி ஒரு அறிவிப்பினை அரசு வெளியிட்டிருப்பது ஓய்வூதியதார்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.