மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்னவேல் நியமனம்! ஒரே நாளில் நடந்தது என்ன?
சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்னவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
Recommended Video
முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற புகாரில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவும் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் காரணமாகவும் நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், அங்கு வழக்கமாக எடுக்க வேண்டிய ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு பதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 'மகரிஷி சரக் சப்த்' என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

பெரும் சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இதையடுத்து இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. அதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 'மகரிஷி சரக் சப்த்' என்ற சமஸ்கிருத உறுதிமொழி தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரியாது என்பதும் அவருக்கு இதில் தொடர்பில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது. மாணவர் பேரவைத் தலைவர் மூலம் இதனை உறுதி செய்துகொண்ட அரசு இன்று ரத்னவேல் மீது எடுத்த நடவடிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது.

என்ன காரணம்?
இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்னவேல் நியமனம் செய்யப்படுகிறார் எனத் தெரிவித்தார். ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகள் காரணமாகவும் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் காரணமாகவும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை உடனடி வாபஸ்க்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா காலம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் ரத்னவேல் சிறப்பான முறையில் செயலாற்றிய தகவல் அவர் மீதான விசாரணையின் போது அரசுக்கு தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், அதன் பிறகே இப்படியொரு முடிவை எடுத்து அதனை சட்டசபையிலும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications