காரைக்குடியை கவுத்துட்டாங்கப்பு.. செட்டிநாடு விமான நிலையம் வராது! கைவிரித்த தமிழக அரசு! என்னாச்சு?
சென்னை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை பரப்பில் சுமார் 1,907 ஏக்கர் நிலம் உள்ளது. இங்குதான் இரண்டாம் உலகப் போரின்போது (1944) இரண்டு விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டன.
இவை இன்று வரை சேதமடையாமல் இருப்பதால், விமான நிலையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இருந்ததாக அப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும், காரைக்குடி, செட்டிநாடு, பிள்ளையார்பட்டி போன்ற இடங்களில் கல்வி, வேலை, வணிகம், கலாச்சாரம் என பல துறைகளில் உள்ளூர் மக்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாக உள்ளனர்.

செட்டிநாடு விமானநிலையம்
அதுமட்டுமல்லாமல் பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம், ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு கண்டாங்கி சேலைகள், அரியக்குடி குத்துவிளக்குகள், செட்டிநாடு கலைப்பொருட்கள் உலகப் புகழ்பெற்றவை. இதனால் கோவிலுக்கும், இந்தப் பொருட்களை வாங்க உலகம் முழுவதும் இருந்து வணிகர்கள் வருகிறார்கள். திரையுலகப் படப்பிடிப்புகளும் அடிக்கடி நடப்பதால், திரைத்துறையினரும் பெருமளவில் வருகின்றனர். தற்போது மக்கள் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
காரைக்குடி விமானநிலையம்
அதனால், காரைக்குடி பகுதியில் தனியாக விமான நிலையம் அமைவது மிகப் பெரிய தேவையாக இருப்பதாக நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், விமானிகள் பயிற்சி மையம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த 2023 முதல், உள்ளூர் மக்கள், தொழிலதிபர்கள் செட்டிநாடு விமான நிலையம் அமைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மத்திய பட்ஜெட்
இந்நிலையில், 2025 மத்திய பட்ஜெட்டில் "செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும்" என அறிவித்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நேமத்தான்பட்டி ரயில் நிலைய மீட்பு குழுவினர், காரைக்குடி தொழில் வணிக கழகம் உள்ளிட்டோர் இதை ஆதரித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி செட்டிநாடு விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு அரசு கூறியுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு நிராகரிப்பு
இது தொடர்பாக காரைக்குடி தொழில் வணிக கழகத்திற்கு, தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் செட்டிநாடு அருகே மதுரை, திருச்சி சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மேலும் செட்டிநாட்டில் உள்ள விமான நிலைய ஓடுபாதையின் தரம், கட்டிடம் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அங்கு விமான நிலையம் அமைக்க சாத்தியமில்லை. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் செட்டிநாடு ஓடுதளம் மேம்படுத்தப்பட்டு விமானிகள் பயிற்சி மையமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
மக்கள் அதிருப்தி
தமிழக அரசின் இந்தக் கடிதத்தின் காரணமாக செட்டிநாடு பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2023 முதல் செட்டிநாடு விமான நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு செயலர் விமான நிலையம் அமைக்க முடியாது எனக் கூறியுள்ளது வேதனையாக இருக்கிறது. மேலும் விமானிகள் பயிற்சி மையத்தால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனக் கூறுகின்றனர்" அப்பகுதி வாசிகள்.












Click it and Unblock the Notifications