அரசு பள்ளி மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்லும் போது மாதம் ரூ1,000-சமூக நீதி வரலாற்றில் புதிய அத்தியாயம்
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்லும் போது மாதம் ரு1,000 உதவித் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சட்டசபையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடபட்டன.
இதில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள், உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும். இதனால் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திராவிடர் இயக்க சிந்தனை
தமிழகம் குறிப்பாக திராவிடர் பேரியக்கம் கடந்த 100 ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசுவதையும் செயல்படுத்துவதையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 1929-ம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டிலேயே பெண்களுக்கு சொத்துரிமை குறித்து தந்தை பெரியார் வலியுறுத்தினார். தந்தை பெரியார், நீதிக்கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் பெண்களின் மேம்பாட்டுக்காக இதுவரை ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கான திட்டங்கள்
உதாரணமாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்பனா சாவ்லா விருது, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்,
அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம், ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம், சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு, சொத்தில் சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு என இந்த பட்டியல் நீள்கிறது.

பேருந்துகளில் இலவச பயணம்
தற்போதைய திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; நிதி நிலைமை சீரான பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலவச பேருந்து பயண திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை 40%-ல் இருந்து 60% ஆக அதிகரித்திருக்கிறது என்பது உள்ளபடியே பெரும் பாராட்டக் கூடியதாகும். அன்றாட கூலி வேலை செய்யும் பணிகள் நாளொன்றுக்கு ரூ30 முதல் ரூ50 வரை பேருந்து கட்டணத்துக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையை தலைகீழாக மாற்றி அவர்களுக்கு சேமிப்புத் தொகையாக அதை கொடுத்திருக்கிறது இந்த அரசு. அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்பதால் வீடுகளில் முடங்கி கிடந்த பெண்கள் பெரும் நம்பிக்கையோடு வேலைகளுக்கு செல்வதையும் ஊக்கப்படுத்தி இருக்கிறது திமுக அரசு.

மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
இப்போது அதே பாணியில்தான் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்விக்கான ஊக்கத் தொகை மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. ஏற்கனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அத்தனை வசதிகளையும் அரசாங்கமே இலவசமாக வழங்குகிறது. அரசு பள்ளிகளின் தரத்தையும் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகள் பக்கம் திரும்புகிற மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்கத் தொகை இன்னும் இந்த எண்ணிக்கையையும் உயர்த்தும்; மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல.. கல்லூரிகளுக்கும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் சென்று திரும்ப முடியும். இது நிச்சயம் கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் கல்விச் சுடரை ஏற்றி வைக்கும். 100 ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் நீட்சியாக சமூக நீதிக்கான பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications