தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசுக்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம்
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்று மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையானது மும்மொழி கொள்கையை திணிக்கிறது என்பது தமிழகத்தின் பொதுவான குற்றச்சாட்டு,

ஆகையால் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனிடையே புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆளுநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தியது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.


இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் 2 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கை திட்டம் வலியுறுத்தும் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சுமையாகத்தான் இருக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவது என தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது எனவும் அதில் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பழகன்.












Click it and Unblock the Notifications