செம.. அதிமுக கூட்டணிக்கு யானை பலம்! கூட்டணியை உறுதி செய்த தமாகா - கடிதம் அளித்த ஜி.கே. வாசன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகஅலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளது.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடிதம் அளித்துள்ளது. தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் வார்டுகளையும் அதிமுக தலைமையிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிகள் களமிறங்குகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிமுக - பாஜக இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு கட்சிகளுமே வேட்பாளர்களை இறுதி செய்வதில் முனைப்பாக உள்ளன.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமக விலகி தனித்து களம் காண்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பேசிய போது,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடன் தமிழ் மாநில காங்கிரஸ் நிலைப்பாடு கூறப்படும் என்றும், தற்போது அதிமுக கூட்டணியில் சமூக நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றும் தெரிவித்திருந்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பில்லாத இடங்களில் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவதை விட உறுதியாக வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் வார்டுகளையும் அதிமுக தலைமையிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் தங்களுக்கு தேவையான கவுன்சிலர் வார்டுகளை ஜி.கே வாசன் கேட்டாலும் கூட, சில வார்டுகளை மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications