"தமிழகத்தை ஒருபோதும் ஆள முடியாது.." உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. ராகுல் காந்தியை சீண்டும் பாஜக
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 308 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், இது தொடர்பாக ராகுல் காந்தியைக் கிண்டல் செய்யும் விதமாக பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ஆங்காங்கே சிறு பூசல்கள் நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்தது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் ஆளும் திமுக கூட்டணி சூப்பர் வெற்றியைப் பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், குறைந்தது 430 பேரூராட்சிகளை அப்படியே திமுக கைப்பற்றி உள்ளது. குறிப்பாக திமுக மட்டும் மாநிலத்தில் உள்ள 7700 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

பாஜக
அதேநேரம் இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பாஜக கணிசமான இடங்களில் வென்றுள்ளது. பாஜக மொத்தம் 308 வார்டுகளில் வென்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 200 வார்டுகளில் பாஜக வென்றுள்ள நிலையில், அது தவிரவும் கூட சுமார் 28 வார்டுகளில் பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் 3ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.

அமித் மாளவியா
இதற்குத் தேசிய அளவில் பல்வேறு பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் ஐடி பிரிவின் தேசிய தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தியைக் கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகத்தில் ஒரு போதும் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். தற்போது வெளியாகி உள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அவரது கருத்துகளைப் பொய்யாக்கியுள்ளன.

இதுவரை இல்லாத இடங்களிலும் வெற்றி
இப்போது தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக 3ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவரை வெல்லாத இடங்களில் கூட பாஜக வென்றுள்ளது" என்று அவர் பாராட்டியுள்ளார். இந்த வெற்றி பாஜகவின் தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாகவும் வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் இந்தத் தேர்தல் திருப்புமுனையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
முன்னதாக நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடர் சமயத்தில் பேசிய காங்கிரஸின் ராகுல் காந்தி, "இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளை என்னிடம் சொல்வார்கள். அதேபோல எனக்கு என்ன தேவையோ அதை அவர்களிடம் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இந்தியா எப்போதும் ராஜ்ஜியமாக இருந்தது கிடையாது. இதனால் தான், ஒரு போதும் உங்களுடைய வாழ் நாளில் தமிழ்நாட்டை நீங்கள் ஆட்சி செய்யவே முடியாது" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications