சிஏஏ சட்டத்தில் ஏகப்பட்ட பொத்தல்கள்; இந்தியா முழுக்க செல்லாத சட்டம்! ஐநா எதிர்ப்பது ஏன்?
சென்னை: பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்திருத்தத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார்.
சிஏஏ சட்டம் 2019இல் பாஜக ஆட்சிக்காலத்தில் திருத்தப்பட்டது. ஆனால், இதற்கான விதிமுறைகள் என்ன என்பதை மத்திய அரசு சில மாதங்கள் முன்னதாக தான் வகுத்தது. அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக அமலாக்கப்படுத்தப்பட்டது.

இப்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்து வாழ்ந்துகொண்டுள்ள 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊடகங்களிலும் இதற்காக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டத்தை நீக்குவோம் என்று கூறி வருகிறது.
அப்படி என்றால், இப்பொழுது வழங்கப்பட்டுள்ள 300 பேரின் நிலை என்ன ஆகும்? அவர்கள் மீண்டும் அகதிகளாகவே வாழ வேண்டி வருமா? எனப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தக் குழப்பங்கள் பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல உண்மைகளை விளக்கிப் பேசி இருக்கிறார்.
அவர் இது பற்றி, "1956களிலேயே இந்த குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்தச் சட்டம் ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அன்று அசாமில் மிகப்பெரிய கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன.
எனவே அமைதியைக் கொண்டுவருவதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் விளைவாக 1956இல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் முதல் முறையாகக் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டதுதான்.
அதன் பின்னால் பலமுறை இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 2003இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாகச் சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் என்ற வார்த்தையைச் சேர்க்கப்பட்டது.

இந்தச் சட்டம் 1992, 2003, 2005, 2016, 2019 எனப் பல கட்டங்களில் திருத்தப்பட்டுள்ளது. இதில் 2019 டிசம்பர் 11இல் பாஜக அரசு செய்த திருத்தம் தான் பேசுபொருளாக இன்றைக்கு மாறியுள்ளது. இதை அமல்படுத்துவதற்குக் காலதாமதமாகிவிட்டது. 11.03.2024 இல் தான் இதை அமல்படுத்தியது பாஜக அரசு.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாள்கள் முன்னதாகத் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனையொட்டி இப்போது 300 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து அகதிகள் எனச் சொல்கிறார்கள். ஆனால், அரசு இதை உறுதிப்படுத்தவில்லை.
இவர் அனைவரும் குஜராத், சத்தீஸ்கர், டெல்லியில் வாழ்ந்து வருபவர்கள் எனத் தெரிகிறது.
அதாவது பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றுவதற்காக எந்த மாநிலங்களில் எல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களில்தான் இந்த மக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவேதான் இதற்குள் ஒரு தேர்தல் ஆதாயம் உள்ளதோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

இதைச் சொல்வதால் இங்கு ஏதோ பாஜக மட்டும் ஒரு ஓட்டு வங்கிக்கு முயற்சி செய்வதாகக் கருதக் கூடாது. காங்கிரஸ் கட்சியும் ஒரு ஓட்டு வங்கியை நம்பித்தான் அரசியல் செய்கிறது. அதில் பேதம் இல்லை. மறுப்பதற்கும் இல்லை.
இந்தக் குடியுரிமைச் சட்டம் என்பது சர்வதேச அளவில் உள்ளது. இதில் மதம் என்பது ஒரு அம்சமே கிடையாது. ஆனால், இந்த 2019 சட்டத்திருத்தத்திற்கு UN human rights commission எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால், இது பிளவுபடுத்தும் நோக்கில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் பலமுறை இந்தச் சட்டத்தைத் திருத்தியுள்ளோம். இருந்தாலும் 2019இல் செய்யப்பட்ட திருத்தம்தான் உலகளாவிய அளவில் ஒரு விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
அதற்குக் காரணம், மதம் என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியுள்ளது பாஜக அரசு. சட்டத்தைத் திருத்துவதற்கு அரசுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நாட்டிலிருந்து வரும் மக்களைப் பிரித்துப் பார்க்கும் நோக்கில் இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்பதே இங்கே சர்ச்சை.

இந்த சிஏஏ சட்டம் சில மாநிலங்களுக்குப் பொருந்தாது. உதாரணமாக அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், லட்ச தீவுகள், இமாச்சலப்பிரதேசம் ஆகிய (inner line states) மாநிலங்களுக்குப் பொருந்தாது.
எனவே இது தேசம் முழுமைக்கான சட்டம் இல்லை. ஆகவேதான் இது குறித்து இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள்.
அதாவது யுபிஏ கூட்டணி ஆட்சியிலிருந்தபோது 12மில்லியன் மக்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் வசிப்பதாக ஒரு கணக்கு சொன்னார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் இது 19 மில்லியன் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஐநா சபையின் கணக்குப்படி பார்த்தால் 4 லட்சத்து 55 ஆயிரம் பேர்தான்.

இப்போது சிஏஏ சட்டத்திருத்தம் மூலம் 30 ஆயிரம் பேருக்குத்தான் பலன் கிடைக்கும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகமே கூறியுள்ளது. இப்படி இந்த எண்ணிக்கை மீது பல குழப்பங்கள் உள்ளன.
ஆகவேதான் இஸ்லாமியர்கள் நம்மைக் குறிவைத்து அழிக்கப்பார்க்கிறது பாஜக அரசு என அச்சப்படுகிறார்கள்" என்கிறார் ஷ்யாம்.












Click it and Unblock the Notifications