பாஜகவுக்கு எதிராக 22 கோடி வாக்காளர்கள்! ‘ஷாக்’ அடிக்கும் 11 மாநிலங்கள்! அப்ப 102 போச்சா?
சென்னை: நாட்டின் மிகப் பெரிய சமூகத்தினரான ராஜ்புத் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரண்டுள்ளனர்.
பாஜக 400க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

ஆனால், அந்தளவுக்கு ஒரு வெற்றியை ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் பெற முடியாது என்று சொல்கிறார்கள்.
நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் 1952இல் நடந்தபோதே கூட அன்றைக்கு பலம் வாய்ந்த கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியே 364 இடங்களைத்தான் கைப்பற்றியது. அதுவே உச்சபட்ச வெற்றியாகக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் 2019இல் பாஜக அதிகபட்சமாக 303 இடங்களைக் கைப்பற்றியதே மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக கடந்த முறையே அதிகபட்சமாக உச்சத்தைத் தொட்டு விட்டது. இனிமேல் அதைவிட ஒரு உயரம் என்பது சாத்தியமில்லை. 10 ஆண்டுகளாக பாஜகதான் ஆளும் கட்சி.

ஆகவே அதன்மீதான ஒரு எதிர்ப்பு என்பது கட்டாயம் உண்டாகி இருக்கிறது. அப்படிப் பார்த்தால், இந்தமுறை கடந்த முறை கிடைத்த சீட்டுகளைவிடக் குறையவே வாய்ப்பு இருக்கிறது.
இப்பொழுது முதற்கட்டமாக 102 தொகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்குப்பதிவு என்பது கடந்த முறையைவிட 4 மடங்கு குறைந்து காணப்படுகிறது.
கடந்த 2019 இல் கிடைத்த பதிவைவிட இந்த முறை வாக்கு குறைந்தால், அது யாரைப் பாதிக்கும். யாருக்கு ஆதரவாகக் கடந்த முறை மக்கள் ஆர்வமாக வாக்களிக்க முன்வந்தார்களோ, அவர்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்திதான் இந்த வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணம். நாம் அப்படித்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக, வெற்றிக்கான வாக்குகளின் எண்ணிக்கையின் அளவு மிகக் குறைவான இடைவெளியில் இருக்கும். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. ஆயிரம் அல்லது 2 ஆயிரம் என்பதே ஒரு வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

அப்படிப் பார்த்தால், பாஜகவும் மாநிலக் கட்சி வேட்பாளர்களும் நேரடியாக மோதும் தொகுதிகளில் பாஜகவின் வெற்றியைவிட மாநிலக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
ஆகவேதான் பாஜக தொடக்கத்தில் முன்வைத்த 400 சீட்டுகள் என்ற கோஷம் இப்போது 300 ஆகக் குறைந்து, முதற்கட்ட தேர்தல் முடிந்தது அது 200 ஆக மாறியது. அப்போது அதைவிட 150 ஆகக் குறையும் என ராகுல் காந்தி சொல்கிறார்.
இதை உணர்ந்ததால்தான் பாஜகவே வடமாநிலங்களில் 400 சீட்டுகள் என்ற முழக்கத்தை அடக்கி வாசிக்கத் தொடங்கி உள்ளது. என்டிஏ கூட்டணியில் பலமான கட்சிகள் இல்லாதது மிகத் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள் அதிகம் உள்ளன.

பிரியங்கா காந்தி நடத்திய Roadshow 6 லட்சம் பேர் கலந்து கொண்டதாகத் தகவல் கிடைக்கிறது. ஊடகங்கள் அதை ஒரு செய்தியாகச் சொல்லவே மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல; மேற்கு பகுதியிலிருந்தும் ஒரு மாற்றம் வரும் என்று அகிலேஷ் யாதவ் சொல்கிறார். அவர் மகாராஷ்டிராவை மனதில் வைத்துத்தான் இதைச் சொல்கிறார். எப்படிப் பார்த்தாலும் பாஜக 150 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கிறார்கள். வடநாட்டுப் பத்திரிகையாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போய் 200 இடங்களைப் பிடிக்கலாம் என்று கணிக்கிறார்கள்.
ராஜ்புத் மக்களின் போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளது. அதன் விளைவாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்றே பல அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் உபியின் மத்திய பகுதியும் மேற்கு பகுதியும் ராஜ்புத் கைவசம்தான் உள்ளது.
கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில், ராஜ்புத் சமூகத்தினரின் வாக்கு என்பது 22 கோடி பேர் உள்ளனர். இவர்கள் 11 மாநிலங்களில் ஆதிகம் செலுத்தும் சமூகத்தினராக உள்ளனர்.
பாஜக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ள மக்களைப் பகைத்துக் கொண்டுள்ளது. இந்த சமூகத்தினர் பாஜகவுக்கு நேரடியாகச் சவால் விட்டுள்ளனர். இதனால் பாஜகவின் வெற்றி மேலும் பாதிப்பைச் சந்திக்கும் என்றே சொல்லப்படுகிறது.

முன்பு உபியில் 79 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த முறை 30 இடங்கள் மட்டுமே ஆதரவு அலை வீசுகிறது. குஜராத்தில் 17 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகமாக ராஜ்புத் மக்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.
ஒரு காலத்தில் மோடியின் வெற்றிக்கு நாடு முழுவதும் அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தவர்களே இந்த மக்கள்தான். இன்று அவர்கள் பாஜகவுக்கு எதிராகத் திரண்டுள்ளனர்.
அதற்குச் சரியான சான்றுதான் உபியில் பிரியங்கா காந்தி நடத்திய ரோடு ஷோ. அதில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில் பங்கேற்ற பாதி மக்கள் ராஜ்புத் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications