மேகதாது அணை: எடியூரப்பா கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு நிலைப்பாடு என்ன?.. துரைமுருகன் அளித்த செம பதில்!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறது. சமீபத்தில் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா ''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று கூறி இருந்தார்.
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு ஏற்கனவே பதில் அளித்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் மேகதாது அணை இரு மாநிலங்களுக்கும் பலன் தரும் என்றும் இதற்கு ஒத்துழைப்பு தரும்படியும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூப்பா கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு துரைமுருகன் கூறுகையில், ' மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு உரிய பதில் அளிக்கப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு விரைவில் பதில் கடிதம் எழுதுவார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக தெரிவிப்போம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications