ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என வதந்தி பரப்புகிறார் நிர்மலா சீதாராமன் - சேகர் பாபு கண்டனம்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நாளைய தினம் தமிழ்நாட்டில் கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள் நடத்த தடை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்புவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள், அன்னதானம் வழங்க, பிரசாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பிலோ இதுபற்றி திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் பூஜைகள் செய்யவோ, அன்னதானம்- பிரசாதம் வழங்கவோ எந்த தடையுமே விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இது தொடர்பான வதந்தி செய்திகள் காட்டுத் தீயாக பரவி கொண்டிருக்கின்றன.

இந்த வதந்தியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அமைச்சர் சேகர் பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சேலத்தில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்பவே திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச்செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications