தைலாபுரத்தில் ராமதாசுடன் அமைச்சர்கள் 'திடீர்' சந்திப்பு.. என்ன ஆலோசனை நடந்தது?
அமைச்சர்கள் சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.
சென்னை: பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் மற்றும் வன்னியர் சமுதாய தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினார்கள்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதுமே அதற்கான கூட்டணி 7+1 என்று ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த சந்தோஷத்தில் திளைத்த டாக்டர் ராமதாசும், உடனடியாக அதிமுக தரப்பினை அழைத்து தைலாபுரத்தில் கறி, மீன் என தடபுடல் விருந்து வைத்தார். இந்த விருந்தில் தேர்தல் செலவுகள் குறித்து பேசப்பட்டதாக லேசாக விஷயம் கசிந்தது.

இந்நிலையில், இப்போது டாக்டர் ராமதாசை தைலாபுரத்தில் சில முக்கிய நபர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளனர். இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்விதுறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ராமதாஸ் தரும் விருந்துக்கு வரவே மாட்டேன் என்று அடம் பிடித்த சிவி சண்முகம்தான் இப்போது தைலாபுரத்தில் ராமதாஸ் பக்கத்தில் முதல் ஆளாக நிற்கிறார். எதற்காக இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.

நாளை பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதால் தொண்டர்களை திரட்டுவது தொடர்பாக ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது அல்லது தொகுதி விவகாரங்கள் குறித்தும் விவாதித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் இப்படி தனக்கு சாதகமான அல்லது தனக்கு பிடித்தமான ஒரு கூட்டத்தின் நடுவே அமர்வது என்பது ராமதாசின் பொதுவான விருப்பம் ஆகும். அதுதான் இப்போது நடந்துள்ளதாகவே தெரிகிறது!!












Click it and Unblock the Notifications