50ஐ தாண்டிய குவைத் தீ விபத்து பலி எண்ணிக்கை..2 தமிழர் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலி! தமிழக அரசு அலர்ட்
சென்னை: குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் குவைத் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது. அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.. அவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கும் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குவைத்தில் இருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள 965-65505246 என்ற உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம்,"காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்களையும் காயம் அடைந்தவர்களின் விவரங்களையும் தங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் குவைத்தில் இருக்கும் தமிழ் சங்கங்களை தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிய முயற்சித்துள்ளதாகவும் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கூறியுள்ளது. மேலும் உயிரிழந்த தமிழர்களின் உடலை தாயகம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications