கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை.. கனத்த மவுனம் காக்கும் பக்கத்து வீட்டு 'பெரியார் மண்'
Recommended Video
சென்னை: மாநில உரிமைகளையும் ஜனநாயக மாண்புகளையும் கட்டிக் காப்பாற்ற பிறந்ததாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகம், கர்நாடகாவில் பாஜகவால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட விவகாரத்தில் கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது பல அரசியல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது பாஜகவின் சித்தாந்தமாகவே மாறிவிட்டது. கட்சித் தாவல், கட்சிகளையே கபளீகரம் செய்வது என அதிகாரப் பசிக்காக அத்தனையையுமே செய்கிறது பாஜக.
மிசோரமில் தாங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சியே அல்ல என்பதற்காக இளைஞரணியைப் போல மிஷினரிகள் அணியை உருவாக்கியிருக்கிறது.
கொத்து கொத்தாக
கர்நாடகாவில் புதிய அணுகுமுறையாக 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மையை இழக்க வைத்திருக்கிறது பாஜக. இப்போதெல்லாம் கொத்து கொத்தாக எம்.ஏல்.ஏக்கள், எம்.பிக்களை வளைப்பது பாஜகவின் பாணி.
ஜனநாயக படுகொலைதான்..
ஒரே தேசம் ஒரே கட்சி என்கிற இந்துராஷ்டிரா கொள்கையை நோக்கி குதிரை சவாரி செய்யும் பாஜகவுக்கு கடிவாளம் போட எந்த கட்சியும் முன்வரவே இல்லை. கர்நாடகாவில் பாஜக செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.
மவுனமாக பெரியார் மண்
இந்தப் படுகொலையை கண்டிக்கும் காங்கிரஸ் அல்லாதவர்களின் குரலாக மாயாவதிதான் வெளியே வந்துள்ளார். ஜனநாயகம், மாநில சுயாட்சி, தன்னாட்சி என்றெல்லாம் பெருமை பேசும் தந்தை பெரியார் மண் அதாவது தமிழ்நாடு, கனத்த மவுனமாக இருக்கிறது.
கனத்த மவுனம் ஏன்?
கர்நாடகாவில் தாமரை மலருகிறது என கூப்பாடு போகிற பாஜகவின் குரலை விமர்சிக்க எந்த தலைவருமே முன்வரவில்லை. அதிகார மிரட்டல்கள் முன்பு உரிமைகளைக் கோரும் குரல்கள் மவுனித்து கிடக்கின்றன என இதை எடுத்துக் கொள்வதா?. ஆபத்து நம்மை நெருங்காதவரை நாம் பாதுகாப்பாக இருப்போம் என பதுங்கிக் கொள்வதாக எடுத்துக் கொள்வதா?
பேராபத்தில் ஜனநாயகம்
ஆனால் மாயாவதி சொன்னதைப் போல, ஜனநாயகத்தின் வரலாற்றில் இது ஒரு கறுப்பு அத்தியாயம்.. இதை மவுனங்கள் மூலம் அனுமதித்தால் ஜனநாயகமே கறுத்துப் போய்விடும் என்பதுதான் அதை பாதுகாக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்து.