நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நவம்பர் 6 இல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறை அனுமதி
சென்னை: நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்திக் கொள்ள காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர் எஸ் எஸ் அமைப்பு காவல் துறை அனுமதி கோரியது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்ட சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் நிர்வாகிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவியது.

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு
இந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு நாடியது. இது தொடர்பான மனுவில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என 9 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் அனுமதி
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ் எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு காரணமாக போலீஸார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசிக எதிர்ப்பு
இதே போல் அக்.2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மற்ற மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்களை சுட்டிக் காட்டி மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications