கூட்டம் கூடி சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் அவ்வளவுதான்... பாத்துக்குங்க... தமிழக காவல்துறை வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
தமிழகத்தில் வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று டிஜிபி திரிபாதியிடம் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஏற்கனவே மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் பரபரப்பு புகார்
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை, கலவரத்துக்கு சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; இந்த பழியை அதிமுக மீது போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்; ஆகையால் இதனை தடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

தினகரன் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த டி.டி.வி. தினகரன், சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்கு பீதியை ஏற்படுத்த்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். எங்க அப்பன் குதிரைக்குள் இல்லை என்று டிஜிபி அலுவலகத்திற்கு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு எதாவது செய்து உண்மை தொண்டர்கள் மீது பழி போட சாதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

சில அமைப்புகள் திட்டம்
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிற அமைப்பினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாக கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி திரிபாதியிடம் அதிமுக அமைச்சர்கள் புகார் கொடுத்த நிலையில் தமிழக காவல்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications