4 அடி உயரத்துக்கு சூழ்ந்த வெள்ளநீர்.. 2-வது மாடியில் சிக்கிய கர்ப்பிணி.. பத்திரமாக மீட்ட போலீசார்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாமல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இன்று பகல் முழுவதும் ஓரளவு மழை பெய்தது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது.
எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் குளம்போல் காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்
சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி ரோட்டுக்கு மேலே வழிந்தோடியது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

9 மாத கர்ப்பிணி மீட்பு
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதி சொக்கலிங்கம் நகரில் வசித்து வந்த 9 மாத கர்ப்பிணியை வேளச்சேரி போலீசார் ஃபைபர் படகு மூலம் மீட்டு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.கன மழையால் வேளச்சேரி பகுதி முழுவதும் வெள்ளநீர் தேங்கியது.
இதேபோல் வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியது. அங்குள்ள குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் வேளச்சேரி போலீசார் ஈடுபட்டனர். அப்போது வெள்ளநீர் ஒரு குடியிருப்பில் 9 மாத கர்ப்பிணி சிக்கி கொண்டார்.

4 அடி உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியது
தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவர் போலீசாரிடம் அபயக்குரல் எழுப்பினார். கர்ப்பிணி இரண்டாம் தளத்தில் வசித்து வந்த நிலையில் அவர் வசிக்கும் இருப்பிடத்தைச் சுற்றி சுமார் 4 அடி உயரத்திற்கு மேல் மழை நீர் தேங்கியிருந்து. இதனை தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஃபைபர் படகு மூலம் கர்ப்பிணியை பத்திரமாக மீட்டனர்.

போலீசாருக்கு பாராட்டு
இதனை தொடர்ந்து அவர் பத்திரமான இடத்திற்கு காவல்துறையின் உதவியுடன் மாற்றப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் தன்னை காப்பற்றிய போலீசாருக்கு கர்ப்பிணி நன்றி தெரிவித்துக் கொண்டார். இதேபோல் பொதுமக்களும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications