சபாஷ்! பெண் குழந்தைகளை காக்கும் ‘இமைகள்’.. தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு.. இது என்ன திட்டம்?
சென்னை: பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் வகையில் 'இமைகள் திட்டம்' தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காத்து, அவர்களின் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'இமைகள் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட நிலையான இயக்கமுறை (Standard Operating Procedure) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அவர்களின் சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவை உறுதி செய்யப்படும்.
மேலும், மருத்துவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு விரைவான சிகிச்சை அளித்து மனநல ஆலோசனையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்து பெண் குழந்தைகளை காவல்துறை எனும் இமைகள் காக்கும்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, ஜூன் 23ஆம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications