விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் வழக்கு.. ஹரி நாடாருக்கு பிப்.3 வரை சிறை
சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடாரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மாலை நடிகை விஜயலட்சுமி அதிகளவில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த முயற்சிக்கு முன்னர் விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் தான் தற்கொலை முயற்சிக்கு செல்வதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

ரத்த அழுத்த மாத்திரைகள்
இதையடுத்து மாத்திரைகளை விழுங்கிய விஜயலட்சுமி அவரது வீட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்தார். வீடியோ தீயாய் பரவியதை அடுத்து திருவான்மியூர் போலீஸார் நடிகை விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரிடம் 3 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருவான்மியூர்
இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொஞ்ச நாட்களில் நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் உடல்நலம் சரியாகாத நிலையில் என்னை மருத்துவமனையிலிருந்து திடீரென வெளியேற்றிவிட்டதாகவும் சீமானுக்காக ஹரிநாடார் என்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.

ஹரி நாடார் கைது
இதையடுத்து புகாரின் பேரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு தற்போது திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே பெங்களூருவில் தொழிலதிபர்களிடம் ரூ 16 கோடி பணம் மோசடி செய்ததாக பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஹரிநாடார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை
இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள ஹரி நாடாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூர் சிறைத் துறையினருக்கு திருவான்மியூர் போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில் ஹரி நாடார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிப்ரவரி 3 வரை, 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications