ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அடுத்தடுத்து வரும் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை கொட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், விடிய விடிய நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications