ரேசன் ஊழியர்களுக்கு ஷாக் செய்தி.. ஸ்ட்ரைக்குக்கு அரசு பதிலடி! கூட்டுறவு பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் உணவுப் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 24ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை சேகரிக்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.

ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.
இந்த ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பணியாளர்களும் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். கைரேகை சரிபார்ப்பு ரேஷன் பொருள் விநியோகம், ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும், பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் பொருள் விநியோகம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்டு இருக்கிறார். அதில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. No Work No Pay என்ற அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் எனவும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருக்கும் பணியாளர்களின் விவரங்களை சேகரித்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், ரேசன் பொருள் விநியோகத்தில் எவ்வித இடர்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications