சுதந்திர தின விழா: பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக்கொடி பயன்படுத்தக் கூடாது.. கல்வித்துறை உத்தரவு!
சென்னை: பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது என பள்ளிகளுக்கு, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா தனது 79 வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு, வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகுந்த பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது. இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications