கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. ஆர்கே நகரை போல் வேலூரில் தேர்தல் ரத்து?.. தமிழக தேர்தல் ஆணையம் பதில்
சென்னை: வேலூரில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளதால் அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்தாகுமா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், தமிழக சட்டசபை இடைத்தேர்தல் என 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள், கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரூ 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லக் கூடாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Duraimurugan: தளபதி மூட்டை.. கிங்ஸ்டன் கல்லூரி ஃபைல்.. கோடிகளில் சிக்கிய பணம்.. அதிர்ச்சி பின்னணி!
78.12 கோடி பறிமுதல்
அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை ரூ. 78.12 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சோதனை
இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் வேலூர் தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் பள்ளியிலும் வருமான வரி சோதனை மற்றும் பறக்கும் படை சோதனை என கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது.
பறிமுதல்
அப்போது ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரது சிமென்ட் குடோனில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்கள் கேள்வி
ஆர் கே நகரில் இதுபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ. 89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த இடைத்தேர்தல் முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அது போல் வேலூரிலும் ரத்தாகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் முடிவு
அப்போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதராஹூ கூறுகையில் வேலூரில் ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையிலேயே வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். எனவே வேலூரில் தேர்தல் ரத்து குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.