சர்வதேச வானியல் ஆராய்ச்சியில் தந்தை பெரியார் பெயர்! நாசா போட்டியில் வென்ற தமிழக மாணவர்கள் அசத்தல்!
சென்னை: நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்திய போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 3 புதிய விண்கற்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த 3 புதிய விண்கற்கள் ஒன்றுக்கு தந்தை பெரியார் சார்ந்த பெயர் ஒன்றை நாசாவிடம் தமிழ்நாட்டு மாணவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இது தொடர்பாக கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் வெளியிட்ட அறிக்கை: நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்-1, பிஎஸ்-2 தொலை நோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களைக் கண்டுபிடிக்கும் போட்டியில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிணி அறிவியல் துறையில் இருந்து சந்தியா, ஷ்யாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையில் இருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத்தினரும் இவர்களுடைய ஐன்ஸ்டீன்ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வனும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் கூடுதல் சிறப்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் 3 புதிய விண்கற்களைக் கண்டுபிடித்தனர். ஆகையால் இந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்கற்கள் ஒன்றுக்கு 'பெரியாரியல்' சார்ந்த பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தந்தால், வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் தந்தை பெரியார் பெயரும் இடம் பெறும். போட்டியில் வென்ற தமிழ்நாடு மாணவர் கழகத்தினருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் பாராட்டுத் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications