ஆசிரியர் தகுதித் தேர்வு அக்.14 முதல் 20 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற 'டெட்' தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை 'டெட்' தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2022
நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 18 முதல் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்கள்
ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
அதில், 'தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

தள்ளி வைப்பு
ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்-1ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால், தாள் 1க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

கணினி வழி தேர்வு
TN TET 2022 தேர்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 15, 2022 வரை கணினி அடிப்படையிலான சோதனை வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் CBT வடிவமைப்பை நன்கு அறிந்திருக்க, TN TET பயிற்சித் தேர்வை TNTRB நடத்தும். TN TET 2022 பயிற்சித் தேர்வு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ TN TRB இணையதளத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் தள்ளிவைப்பு
மேற்படி கணினிவழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச் சட்டு (Admit card) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.

அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வு
இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தள்ளி வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு இரு வேளைகளில் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை, நுழைவு சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வரிய இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பு என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications