மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது தொடங்கும்? அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்பதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கான, பயன்பாட்டு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்திய பிறகே, குறிப்பிட்ட வீடுகளுக்கான மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாடு கணக்கீடு எடுக்கப்படுவதால், மொத்த பயன்பாடு என்பது எளிதாகவே இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட்களை கடந்து விடுகிறது. அதோடு, மின்சார பயன்பாடு 400 யூனிட்களுக்குள் அடங்கிவிட்டால், ஒரு யூனிட்டிற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4.80 செலுத்தினாலே போதுமானது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடுவதால் மொத்த பயன்பாடு அதிகரிக்கிறது. 400 யூனிட்களை கடந்தால் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.45 முதல் ரூ.8.55 வரை செலுத்த வேண்டி உள்ளது.
குறிப்பாக கோடை காலத்தில் அதிக நுகர்வு காரணமாக, மின் கட்டணம் வெகுவாக அதிகரிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இதன் காரணமாகவே மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு செய்து, கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்த உடன், மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்துவது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ். எஸ். சிவசங்கர், கோவி. செழியன் ஆகியோர் சென்னையில் இன்று தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, மாதந்தோறும் மின் கட்டணம் என்ற அறிவிப்பு எப்போது வரும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படும் பட்சத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது மக்களுக்கு எளிமையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications