ஹே அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தீபாவளிக்கு சென்னையில் மழை இருக்காது- வெதர்மேன் குட் நியூஸ்
சென்னை: தீபாவளி பண்டிகை அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 4ஆவது வாரம் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் வெப்ப மண்டல சூறாவளி வரும் 24 ஆம் தேதி உருவாகிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளையும் வலுபெறுகிறது.

வடமேற்கு திசை
இது வடமேற்கு திசையில் மெல்ல நகர்கிறது. பின்னர் தீபாவளி பண்டிகையின் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறுகிறது. இது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே வரும் 25 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேகம் குறைவு
அன்றைய தினம் காற்றின் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் கரையை கடக்கும் நேரம் என்பது ஒரு நாள் முழுக்க ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்காக மக்கள் பட்டாசு வாங்க படையெடுக்கிறார்கள். இந்த நேரத்தில் மழை பெய்தால் பட்டாசு வெடிக்க முடியாதே என்ற கவலை ஒரு புறம் இருக்கிறது.

சிவகாசி
மறுபுறம் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் பல குடும்பங்கள் இரவு பகல் பாராமல் தயார் செய்துள்ளனர். இவர்களுடைய உழைப்பை இந்த மழை வந்து பாழாக்கிவிடக் கூடாது என்ற கவலை பட்டாசு விற்பனையாளர்களுக்கு உள்ளது. பட்டாசு, விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகள் எல்லாம் அந்தந்த சீசனில் அதிக அளவில் விற்கப்படும்.

சீசனில் விற்றால்தான்
இவை சீசனில் விற்றால்தான் தொழிலாளர்களுக்கு நல்லதொரு வருமானத்தை தரும். இதனால் சிட்ரங் புயலால் தீபாவளி அன்று தமிழகத்தில் மழை பெய்யுமா பெய்யாதா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்வாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் கூறியிருக்கையில் தீபாவளி பண்டிகை அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை இருக்காது.

மழை இருக்காது
அது போல் வட தமிழகத்திலும் மழை இருக்காது. ஆனால் தென் தமிழகத்தில் சில இடங்களில் அங்கும் இங்குமாக மழை இருக்கும். இன்றைய தினம் சென்னையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழுங்கள் என வெதர்மேன் ட்வீட் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications