தம்பட்டம் எதற்கு; பாஜகவுக்கு இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? தமிழக காங்கிரஸ் கமிட்டி பாய்ச்சல்!
சென்னை: 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறி பாஜகவினர் கொண்டாடுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி மூன்றரை கோடி பேர் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பாஜகவினர் அடிக்கும் தம்பட்டம் அவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

100 கோடி தடுப்பூசி
கொரோனா பரவல் எண்ணிக்கை சமீபகாலத்தில் படிப்படியாக குறைந்து வந்தாலும் ஏற்பட்ட மனித இழப்புகளையும், பாதிப்புகளையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. இத்தகைய இழப்புகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு முழு பொறுப்பு ஏற்காமல், நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

விளம்பர பேனர்
நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் மிகப் பெரிய படத்தை இடம் பெறச் செய்து 'மோடி அவர்களே, நன்றி... நன்றி' என்று நாட்டு மக்கள் வாழ்த்துவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளைப் போட்ட முதல் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சீனா அமைதி
ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்து பார்த்தால் இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்ட அதேநாள் வரை சீன நாடு 220 கோடி தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடுகிற சாதனை படைத்த சீன நாடு இதை ஒரு விழாவாகக் கொண்டாடவில்லை. அமைதியான முறையில், ஆரவாரமில்லாமல் கொரோனா தொற்றை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்று வருகிறது.

பிரிட்டிஷ் நாட்டில்
100 கோடி தடுப்பூசி போட்டது இந்திய அறிவியல் துறையின் வெற்றி என்று பிரதமர் மோடி கூறுகிறார். தடுப்பூசிகள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். கோவிஷீல்ட் என்பது பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதே தவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல.

மூடி மறைக்க
எனவே, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் எடுக்காமல் ஏற்பட்ட பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதை கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பா.ஜ.க. அரசின் இமாலய தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது.












Click it and Unblock the Notifications