மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு.. 3 நாட்களே அவகாசம்.. தீவிர களப்பணியில் மின் துறை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
சென்னை:மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு வரும் 15 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில், 3 நாட்களே அவகாசம் இருப்பதால் அதற்குள் 100 சதவீத நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என்ற இலக்குடன் மின்வாரிய ஊழியர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

துவக்கத்தில் மக்கள் தயக்கம்
தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற அச்சம் நிலவியதால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு துவக்கத்தில் மக்கள் தயக்கம் காட்டினர். எனினும், ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார வாரியம் உறுதி அளித்தது.

சிறப்பு முகாம்கள் மூலம் இணைப்பு
மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியது. அதன்படி தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மின்சார வாரிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டன. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிப்ரவரி 15-ம் தேதி கடைசி
ஆனால், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். ஒரு மாத கால அவகாசத்திற்கு பிறகும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதனால், மீண்டும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்தது. அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கால அவகாசம் நீட்டிக்கப்படாது
மின்சார வாரியம் அறிவித்த இந்த கூடுதல் அவகாசம் இன்னும் 3 நாட்களில் முடிவடைய இருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் எக்காரணம் கொண்டு நீட்டிக்கப்படாது என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. இதனால், ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் அதற்குள் இணைத்து விட என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பட்டியலை மின்சார வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

வீட்டிற்கே நேரடியாக சென்று
அந்தப் பட்டியலை அடிப்படையாக வைத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் நுகர்வோர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று விவரங்களை பெற்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 3 நாட்களில் காலக்கெடு முடிவடைவதால் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்களையும் இணைக்க வைக்கும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் முழு வீச்சில் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications