மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. "லோகேஷனை" பதிவு செய்யும் பணி தீவிரம்.. "மின்னகம்" நம்பர் குறிச்சுக்கோங்க
சென்னை: தாழ்வழுத்த பிரிவில் இணைப்பை பெற்றுள்ள நுகர்வோரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை மின்சார வாரியம் துரிதப்படுத்தியிருக்கிறது.
பொதுமக்களின் நன்மைகளையும் வசதிகளையும் கருதி மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மின்பழுதுகள், மின் மாற்றிகள் தொடர்பான பணிகள் விரைந்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, மின் நுகர்வோரின் இருப்பிடத்தை பதிவு செய்யும் பணிகளை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மான பிரிவு இயக்குனர் அனைத்து தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்..
அதில், "தாழ்வழுத்த பிரிவில் இணைப்பை பெற்றுள்ள நுகர்வோரின் இருப்பிடத்தை ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பின் மூலம் பதிவு செய்யும் பணிகளை மின்வாரியம் முன்னெடுத்தது. நுகர்வோரின் முகவரியை ஒப்பிடும்போது சரியான இருப்பிடத்தை (லோகேஷன்) அறிவதன் மூலம்தொழில்நுட்ப பிரச்சனைகளை எளிதில் நேரடியாக சென்று சீர்செய்ய முடியம்.
நேரில் ஆய்வு: இதற்காக வாரிய தொழில்நுட்பப்பிரிவு உருவாக்கிய டிஎன்ஈபிஜிஐஎஸ் என்னும் செயலி மூலம் நுகர்வோரின் இருப்பிடத்தை நேரில் சென்று உறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், மொத்தமுள்ள 3.35 கோடி நுகர்வோரில் 1,95 கோடி நுகர்வோரின் இருப்பிடம் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 58 சதவீதம் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.. மீதமுள்ள நுகர்வோரின் இருப்பிடத்துக்கும் நேரில் சென்று, இருப்பிடத்தை பதிவு செய்யும் பணிகளை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறது.
மின்னகம்: அதேபோல பொதுமக்கள் தங்கள் புகார்களை, மின் நுகர்வோர் சேவை மையத்திலும் தெரிவிக்கலாம்.. பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவிக்க "மின்னகம்" என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்துள்ளார்.. இந்த சேவை மையமானது, வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும்.. எனவே, பொது மக்கள் இந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
குறிப்பாக மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற/ இறக்கம், உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள்/ புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் புகார்களை அளிக்கலாம்.
மின்நுகர்வு: இதனிடையே, தமிழகத்தில் தனிநபர் மின்நுகர்வு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவையே, மின் நுகர்வு என்கிறோம்.. அதாவது, ஓராண்டில் மாநிலம் முழுதும் பயன்படுத்திய மொத்த மின் பயன்பாட்டை, மொத்த மக்கள் தொகையால் வகுத்தால், தனிநபர் மின் பயன்பாடு கிடைக்கும்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்சார தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான மின்சாரம் நமக்கு கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மெகா வாட்: தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக இருந்துவரும் நிலையில், கோடை காலத்தில் இந்த மின்நுகர்வு அதிகரித்துவிடுகிறது. இந்த வருடம், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, 19387 மெகா வாட் என்று எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.. அதிலும், ஏப்ரல் 20ம் தேதி, 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்திருந்தது தமிழகத்துக்கே அதிர்ச்சியை தந்துவிட்டது.
மின் வாகனம், ஸ்மார்ட் போன், லேப்டாப், ஏசி போன்ற சாதனங்களின் பயன்பாடு, புதிய கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால், இந்த மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்போதுகூட, முந்தைய ஆண்டில் தனிநபர் மின் நுகர்வானது 1,640 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக, 152 யூனிட்கள் அதிகரித்துவிட்டதாம்.
தனிநபர் நுகர்வு: அந்தவகையில், தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு, 2023 - 24ல், 152 யூனிட்கள் உயர்ந்து, 1,792 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications