தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? தமிழக அரசின் FACT CHECK விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

அதாவது, ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது
இதன் அடிப்படையில், நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இதன்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. 2022-ல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
எனவே, நடப்பு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தையும் உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என மக்கள் கவலைப்பட்டனர். இந்த நிலையில், மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகியது.
இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் மீண்டும் உயரப்போகிறது என்று வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு Fact Check குழு கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக ஒரு அட்டவணை படம் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. இது கடந்த 2022-ஜூலையில் வெளியான செய்தி. தற்போது மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக மின்சார வாரியமும், மின் கட்டணம் உயர்த்தப்படும் என பரவும் தகவலை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரியம் கூறுகையில், "2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தியை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆகவே, ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என பரவும் செய்தி வதந்தியே. தற்போது மின்கட்டண உயர்வு செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழகம் ஆகியவை மூலமாக மின்சாரம் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் 2026-27 ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டில் 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில் வீடுகளுக்கான கட்டணம் உயர்வை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு யுனிட் ஒன்றிற்கு 13 காசு முதல் 21 காசு வரை கட்டணம் உயர்ந்தது.












Click it and Unblock the Notifications