குரூப் 1,குரூப் 2, 2ஏ எழுதியிருக்கீங்களா.. இன்று ரிசல்ட்.. உடனே செக் பண்ணுங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அரைகாசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அதன் காரணமாகவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுதுகின்றனர். அரசு வேலைக்காக லட்சக்கணக்கான பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கெனவே தற்காலிக தேர்வு முடிவு அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். இந்த நிலையில் குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இணைய தள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களின் எண்கள் வெளியாகியுள்ளன,
அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைத்துள்ளது. அடுத்த அதிகாரி ஆகப்போகும் அனைவருக்கும் ஒன் இந்தியா சார்பாக வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications