66 பதவிகளுக்கு 1.31 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது
முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு மே 28, 29, 30 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட 66 காலியிடங்களுக்கு மொத்தம் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1.31 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட 66 காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்தாண்டு ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது.
66 காலி பணியிடங்களுக்கு மொத்தம் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1.31 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர்.
கொரோனா பரவல் காரணமாக சானிடைசர், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றது. மேலும் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 200 வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்று இருந்தது. இதில் பொது அறிவியலில் 175, திறனறிவில் 25 என 200 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இம்முறை பதில் தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் கூடுதலாக (E) ஆப்சன் கொடுக்கப்பட்டு இருந்தது.
தந்தை பெரியார் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், சுய மரியாதை இயக்கத்தின் தத்துவம், சென்னை மாநில சுயமரியாதை இயக்கத்தை முதலாவதாக தலைமையேற்று நடத்தியவர் யார், தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர், நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.