டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எக்ஸாம் எழுதுனீங்களா.. முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற்பகலிலேயே முடிவுகள் வெளியானது. வரும் டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வானது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எழுத தகுதி பெறுவர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 8 வரை தேர்வுகளை நடத்துகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு வைத்து அதன் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் முதலில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும், இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்தது. மொத்தம் உள்ள 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிற்பகலிலேயே குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வில் நேரடியாக கலந்துகொள்கிறார்கள். தேர்வு நடைபெற்ற 50 நாட்களுக்குள்ளாகவே குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:
துணை ஆட்சியர் - 16 இடங்கள்
துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) - 23,
வணிகவரித்துறை உதவி ஆணையர் - 14
கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21
ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி - 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.












Click it and Unblock the Notifications