TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையத்தலைவர் அறிவித்துள்ளார்.
சென்னை: குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் அறிவித்துள்ளார். இந்த தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்காக தேதிகள் அறிவிக்கப்பட்டன. மே மாதம் 21ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் -4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்று இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையத்தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் இந்த ஆண்டு மொத்தம் 7382 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். ஜூலை மாதம் 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை வெளியிடப்படும் என்று கூறினார்.

இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 274 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தலைவரின் அறிவிப்பால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications