ஸ்பெஷல்.. குமரி கடலுக்குள் கண்ணாடி மேம்பாலம்..விவேகானந்தர் பாறை-திருவள்ளூவர் சிலை இடையே நிறுவ அனுமதி
சென்னை: கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளூவர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழைப்பாலம் அமைக்க தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ரூ.37.81 கோடியில் கன்னியாகுமரி கடலில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கண்ணாடி இழைப்பாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை ரசித்தபடி மக்கள் பயணிக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் கன்னியாகுமரியும் முதன்மையானது. இங்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக காலை நேரத்தில் சூரியன் உதயத்தை பார்க்க நிறைய பேர் குவிவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மேலும் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளூவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலை
கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை அமைந்துள்ள நிலையில் இரண்டு இடங்களையும் பார்க்க மக்கள் படகில் செல்ல வேண்டும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. முதலில் படகில் விவேகானந்தர் மண்டபம் செல்லும் பயணிகள் அங்கிருந்து திருவள்ளூர் சிலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

படகு போக்குவரத்து தடை
இந்நிலையில் தான் திடீரென்று கடலில் ஏற்படும் நீரோட்ட மாற்றத்தால் திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத சூழல் ஏற்படும். அதாவது விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளூர் சிலைக்கு படகு போக்குவரத்து இயங்கப்படாமல் தடை செய்யப்படும். இதனால் திருவள்ளுவர் சிலையை அருகே சென்று பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் திரும்பும் நிலை ஏற்பட்டு வருகிறது.

ரூ.37.81 கோடி மதிப்பீட்டில் பாலம்
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளூவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தான் விவேகானந்தர் பாறை-திருவள்ளூவர் சிலை இடையே கண்ணாடியால் இழைப்பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுதொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. மேலும் ரூ.37.81 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழைப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

கடலோர மேலாண் ஆணையம் அனுமதி
மேலும் இந்த பாலம் கடலுக்கு நடுவே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில் தான் விவேகானந்தர் பாறை-திருவள்ளூவர் சிலை கண்ணாடி இழை பாலம் அமைக்க அந்த ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

கண்ணாடி இழைப்பாலம் என்ன?
இந்த மேம்பாலமானது கன்னியாகுமரி கடலில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கண்ணாடியில் அமைய உள்ளது. அதாவது பாலத்தில் நாம் நடந்து செல்லும் பகுதியும் கண்ணாடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் பாலத்தின் நடந்து சென்றபடியே நம் காலுக்குள் கீழே உள்ள கடலின் நீரோட்டத்தை கூட ரசிக்க முடியும். வெளிநாடுகளில் பல இடங்களில் இத்தகைய கண்ணாடி இழைப்பாலம் கன்னியாகுமரி கடலில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications