பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறவங்க பூராம் இதைப் படிங்க… 24,000 சிறப்பு பேருந்துகள் ரெடி!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் தேவைக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
24,708 பேருந்துகள்
தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது, மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
6 லட்சம் பயணிகள்
அதில், 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். பல்வேறு கட்டங்களாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. இந்த ஆண்டில் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தகுந்த முன்னேற்பாடுகள்
அதற்கான முன்னேற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சகம் செய்து வருகிறது. அதேபோல், பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு, மீண்டும் ஊர் திரும்புவதற்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை விட ஏற்பாடுகள் செய்துள்ளோம். வரும் 2ம் தேதி நடைபெறும் மற்றொரு ஆய்வு கூட்டத்தின் முடிவில் அது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்.
சிறப்பு கவுண்டர்கள் திறப்பு
பயணிகளின் வசதிக்காக வரும் 9ம் தேதி டிக்கெட் முன்பதிவுக்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும். ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், சிதம்பரம், கும்பகோணம் போன்ற கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
மதுரை - கோவைக்கு
திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். கணிசமான பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து சேலம், மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப் படும். குறைந்த கட்டணத்தில் அதிகளவில் அரசு பேருந்துகளை இயக்குகிறோம்.
ஆம்னிகளுக்கு எச்சரிக்கை
பண்டிகை காலங்களின் போது அனைத்து தரப்பு பொதுமக்களும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன்வர வேண்டும். பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.