தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கணும்... அதனால தான் பாஜகவோடு கூட்டணி சேர்ந்தோம்.. ஓபிஎஸ் பேச்சு
சென்னை:தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தான் கூட்டணி சேர்ந்தோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையடுத்து கிளாம்பாக்கத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.

கூட்டணி இமாலயம் போன்றது
அப்போது அவர் கூறியதாவது: இமாலய வெற்றிக்கான முன்னோட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு வயிறு கலங்கி இருக்கும். துரோகிகளுக்கு பயம் வந்திருக்கும்.

அறிவிக்க ஸ்டாலின் தயக்கம்
இலங்கையில் தமிழ் இனம் அழிய காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் மறக்க மாட்டார்கள். கொல்கத்தா கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தயங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

தவறு பண்ணமாட்டோம்
அம்மாவின் வழியில் வந்தவர்கள் நாங்கள். நாங்களும் தவறு செய்யமாட்டோம். தவறு செய்பவர்களுடன் சேர மாட்டோம். தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தான் கூட்டணி சேர்ந்தோம்.

மோடி மீண்டும் பிரதமர்
மோடி சென்னை வந்த போது ஜெயலலிதாவை சந்தித்தார். இருவரின் நட்பை நன்கறிவோம். இந்திய நாட்டுக்கு மோடி தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று நாடே சொல்கிறது.

தகுதி உடையவர் இல்லை
எதிர்க்கட்சிகளால் யார் பிரதமர் என்று உறுதியாக கூற முடியாது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இல்லை. ஒரு நபர் கூட,காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் ஆக தகுதி பெற்றவர் இல்லை.

அதெல்லாம் பொய்
பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது சுத்த பொய்.

வெற்றி நமக்குதான்
வர உள்ள தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான தேர்தல். ஓய்வில்லாமல் உழைப்போம். 40 தொகுதிகளிலும், 21 தொகுதிகளிலும் இமாலய வெற்றி பெறுவோம் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications