அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம்
சென்னை: கொரோனா மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. வீடு வீடாக பரிசோதனை நடத்துவது., குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை நடத்துவது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
இதேபோல் சென்னை உள்ள தனியார் மண்டபங்கள் மற்றும் கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களை தனிமைப்படுத்துதல் முகாமிற்காக கையகப்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும் சென்னை மாநகரம் முழுவதும் மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
லடாக் இல்லை.. பெங்களூர் எல்லைதான்.. கடும் கெடுபிடி.. நடந்து சென்றாலும் அடித்து விரட்டும் போலீஸ்
இந்நிலையில் மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.