மீண்டும் தீவிரமாகும் கொரோனா வைரஸ்? சென்னை ஐஐடியில் என்ன நிலை! தீவிர ஆலோசனையில் தமிழக அரசு
சென்னை: நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை ஐஐடி வளாகத்திலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.
கடந்த 2020இல் இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021 டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் 2ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் மோசமாகவே இருந்தது.
அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல் 2 அலைகளைப் போல இல்லாமல் 3ஆம் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 512,727,166 பேர் பாதிப்பு.. 6,258,741 பேர் பலி
கொரோனா கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக ஓமிக்ரான் கொரோனாவால் ஏற்பட்ட 3ஆம் அலை மிக விரைவில் கட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து கிட்டதட்ட அனைத்து மாநிலங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியது. மாஸ்க் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். இந்தச் சூழலில் இப்போது நாட்டில் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல உயர தொடங்கி உள்ளது.
சென்னை ஐஐடி
தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சென்னை ஐஐடி வளாகத்தில் தினசரி பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை ஐஐடி வளாகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை ஐஐடியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 196ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு இடையே கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்
முன்னதாக தமிழ்நாடு மருத்துவ துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்தார். ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தொடர்பாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அதேநேரம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 54 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இப்போது மொத்தம் 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.