ஆதார் அட்டை இருக்கா? பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
சென்னை: மத்திய அரசு கடந்த ஆண்டு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியது.. அத்துடன் இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி என நிர்ணயித்து இருந்தது. அதன்படி பான் எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள் ஆகும். இல்லாவிட்டால் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்படலாம்.
ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாக பான் கார்டுகள் உள்ளன.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

முக்கியத்துவம்: அதேபோல குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் பான் அட்டைகள் அவசியம்.. கடன் வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு பான் கார்டுகள் அவசியமாகின்றன.
இப்படி வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பான சேவைகளுக்கு முக்கிய தேவையாக இருப்பதால்தான், பான் ஆவணத்தை ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. அந்தவகையில், ஆதார் மற்றும் பான் கார்டை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அதாவது இன்றைய தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு: அதுமட்டுமல்ல, சமீபகாலமாக இந்தியாவில் பண மோசடிகள் அதிகமாக நடக்கின்றன.. வெறும் பான் கார்டு நம்பரை வைத்து மட்டுமே ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கவே, பான் கார்டுடன் ஆதார் இணைப்பது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. இப்படி இணைப்பதால், போலி பான் கார்டுகளும் புழக்கத்திலிருந்து தடுக்கப்படும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க, கட்டணம் எதுவுமின்றி இலவசமாக சலுகை தந்திருந்தது. ஆனால், கடந்த வருடம் காலக்கெடு முடிந்துவிட்டதால் தற்போது கட்டணம் நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் 2 ஆவணங்களையும் இணைக்க 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது அபராதம் செலுத்த வேண்டும்.
இன்றே கடைசி: ஒருவேளை இன்றைக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்படலாம். பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டால் நிதி ரீதியான பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். எனவே, வருமான வரித்துறை அலுவலகம் வாயிலாகவே பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து விடலாம். பான், ஆதார் இணைப்பை ஆன்லைனிலே எளிமையாக செய்து முடிக்கலாம். எப்படி தெரியுமா?
- முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்
- Profile பக்கத்தில் Quick Links தேர்வு செய்து அதிலுள்ள "Link Aadhaar" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்களை பதிவிட வேண்டும்.
- e-Pay Tax மூலம் பணம் செலுத்த என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்களது பான் எண்ணை பதிவிட்டு உறுதிப்படுத்தினால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- OTP சரிபார்ப்புக்குப் பிறகு, e-Pay Tax பக்கம் உங்களது ஸ்கிரீனில் தோன்றும்.
- Income Tax பட்டனில் இருக்கும் "Proceed" என்பதைக் கிளிக் செய்து, தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு மற்றும் கட்டணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
- தாமத கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியும்.
- இப்போது புரொபைல் பக்கத்தில், "Aadhaar Status" என்பதைக் கிளிக் செய்தால், உங்களது பான்-ஆதார் இணைப்பின் நிலையைச் சரிபார்க்கலாம். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆதார், பான் கார்டு இணைக்கப்பட்டதற்கான மெசேஜ் விண்ணப்பத்தாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications