பக்ரீத் கொண்டாட்டம்.. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!
சென்னை:இந்தியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.
ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் நாள்க்காட்டியில் ஹஜ் மாதம் 10ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்
அதன்படி இந்தியாவில் இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்மக்கள் அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சிறப்பு தொழுகை
புகழ்பெற்ற நாகூர் தர்கா, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காயிதே மில்லத்திடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏராளமாணவர்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல் பிற மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் மக்கள் கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு..
இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து
இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின், அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications