இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்!
சென்னை: இன்று விடுதலையாகும் சசிகலாவுக்கும் சரி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சரி, இன்றைய நாள் மறக்க முடியாத நாள் ஆகும். இந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா இன்று காலை விடுதலையாகி உள்ளார். அதேநேரம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
இந்த இரண்டுமே தற்செயலாக நடக்கிறது என்றாலும், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்துள்ளது,

சசிகலாவுக்கு சிறை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அவரது மறைவுக்கு பின் அடுத்த ஒன்றரை மாதத்தில் அதாவது 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக பதவி ஏற்பதாக இருந்தார். ஆனால் திடீரென ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தம் காரணமாக பதவி ஏற்பு தள்ளிப்போனது. அடுத்தபடியாக உச்ச நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.

எடப்பாடி முதல்வர்
இதன் காரணமாக பிப்ரவரி மாதம் 17ம் தேதி ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குமாறு எம்எல்ஏக்களிடம் ஆதரவு தெரிவித்துவிட்டு மறுபக்கம் டிடிவி தினகரனைஅதிமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமித்து விட்டு பெங்களூரு சிறைக்கு சென்றார். அடுத்த நாள் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார்.

ஓ பன்னீர்செல்வம்
அதேநேரம் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அதிமுகவில் இருந்து பிரிந்ததால் அதிமுக என்ற கட்சி முடங்கியது. இரட்டை இலை சின்னமும் முடங்கியது. இறுதியில் ஓபிஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் அணியினர் எடப்பாடியுடன் இணைந்தனர். அதன்பின்னர் அதிமுக கட்சியும், சின்னமும் மீண்டும் கிடைத்தது.

4 ஆண்டுகள் ஆட்சி
இப்போது அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதேநேரம் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓபிஎஸ் இருக்கிறார். இந்நிலையில் ஆண்டுகள் 4 உருண்டோடியது. தற்போது ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டு அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

உடல் நிலை
அதேநேரம் சசிகலாவின் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிந்து விடுதலையாகி உள்ளார். ஒருவேளை சசிகலாவின் உடல் நிலை சிறப்பாக இருந்திருந்தால் இன்று மாலையே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா வருவது உறுதியாகி இருந்திருக்கும். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பார் என தெரிகிறது.

இன்று திறப்பு
சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகும் இன்று தான், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் மிகப்பெரிய அதிகார உச்சத்தில் இருக்கிறார். அத்துடன் தனது தலைவி ஜெயலலிதாவின் நினைவிடத்தையும் எடப்பாடி பழனிசாமி தான் திறந்து வைக்கிறார். இதன் மூலம் அதிமுகவின் வரலாற்றில் எடப்பாடி பழனிசாமி என்று பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார். சசிகலா வந்த பின் ஏற்பட போகும் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் சசிகலாவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இன்றைய நாள் மறக்க முடியாதது தான்..!












Click it and Unblock the Notifications