கண்டுபுடிச்சது மார்க்கோனி..கேக்க வச்சது இசைஞானி.. மறக்க முடியுமா ஆல் இந்திய ரேடியோ மாநிலச் செய்திகளை
சென்னை : இன்டர்நெட் யுகத்தில் கைக்குள் உலகமே வந்து விட்டாலும் இன்னும் பலரது மனதை கொள்ளைகொள்வது வானொலி என்றால் அதை மறுக்க முடியாது. மின்சாரம் கூட இல்லாத இடங்களில் தற்போது வரை நேயர்களை அரவணைத்துச் செல்லும் வானொலிக்கான சிறப்பை உணர்த்தும் உலக வானொலி தினம் இன்று..
"பறவையை கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினை கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" தமிழ் திரையுலகில் மாபெரும் ஆளுமையான கவியரசர் கண்ணதாசனின் வரிகள் இவை.
தொலைக்காட்சி இணையம் என ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்ட போதிலும் வானொலி என்பது பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக இன்றுவரை உள்ளது. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்திதான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
சீட்டோடு வந்த ராஜேந்திர பாலாஜி.. ஒரே அறையில் 11 மணி நேரம்.. 134 கேள்விகள்.. திணற வைத்த அதிகாரிகள்!
உலக வானொலி தினம்
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி உலக வானொலி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒளிபரப்பு சேவையை கொண்டாடவும் பன்னாட்டு வானொலி நேயர்கள் இடையே உறவை ஏற்படுத்தும் வகையிலும் வானொலி மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ 2011ம் ஆண்டு உலக வானொலி தினத்தை அறிவித்தது. இதையடுத்து 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி முதலாவது உலக வானொலி நாள் கொண்டாடப்பட்டது.
வானொலிகளின் மதிப்பு
தற்போது தமிழகத்தில் பல்வேறு வானொலிகள் ஆங்காங்கே முளைத்து கிடந்தாலும் "ஆல் இந்தியா ரேடியோ மாநிலச் செய்திகள் வாசிப்பவர் சரோஜினி" என்ற வார்த்தை 1980ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலம். தற்போது கோடை பண்பலை, எஃப்எம் ரெய்ன்போ, உள்ளிட்ட அரசு வானொலிகளும், தனியார் வானொலிகளும் பெருகுவதால் அவற்றிற்கான மதிப்பு இன்றளவும் அப்படியே இருக்கிறது. சலவைத் தொழிலாளிகள் முதல் ஓட்டல் முதலாளிகள் வரை வானொலி இல்லாமல் அவர்கள் நாட்களைக் கடத்துவது கடினம். குறிப்பாக பெரும் தொழிற்சாலைகளில் கூட வானொலிகளை ஒலிக்கச் செய்து தொழிலாளர்களின் வேலை களைப்பை போக்கி வருகின்றன.
இளையராஜா பாடல்கள்
தற்போது இரைச்சலான வானொலிகள் அதிகமாகி விட்ட போதும் இரவு நேரங்களில் மனதைத் தாலாட்டும் இளையராஜாவின் பாடல்களை வானொலியில் கேட்டு விட்டு உறங்கச் செல்வது இன்னும் பலருக்கு வாடிக்கையான ஒன்று. அதனால்தான் பகலில் கத்தி சத்தம் போடும் எஃப்.எம்.கள் கூட இரவு நேரங்களில் இளையராஜாவுக்கு என்றே தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. உடல் களைத்து மனம் உறங்கச் செல்லும் இரவு நேரங்களில் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலைக் கேட்கும் போது வரும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் என ஏசுதாஸின் நெஞ்சை உருக செய்யும் குரலைக் கேட்டு விட்டு உறங்க சென்றால் அந்த இரவு இனிமையான இரவு தான். இன்னும் பல பெருமைகளை வானொலி குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.
Recommended Video
நேயர்களின் எதிர்பார்ப்பு
தற்போதைய 2k கிட்ஸ்களுக்கு வானொலி குறித்து அவ்வளவாக தெரியாத நிலையில், அவர்களின் தந்தையிடமும் அல்லது தாத்தாவிடம் போய் கேட்டால் அவர்கள் அடுக்குவார்கள் ஆயிரக்கணக்கில் வானொலியின் பெருமைகளை. இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கி, தற்போதைய மன் கி பாத் வரை வானொலியின் முக்கியத்துவத்தை அரசுகளும் உணர்ந்துதான் உள்ளன. அதே நேரத்தில் பல வானொலி நிலையங்களை மூடும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பிரசார் பாரதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் வானொலி சேவைகளை முடக்கக் கூடாது என நேயர்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தும் வரும் இந்த வேளையில், உலக வானொலி தினத்தில் அதனை மேலும் மெருகேற்ற முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு..