அவமதிப்பு வழக்கு.. சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனை இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. அதோடு உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைகள் பற்றி கருத்து சொல்ல சவுக்கு சங்கருக்கு வழக்கு முடியும் வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த நிலையில் 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சவுக்கு சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அரசியல் சார்ந்தும், சமூக பிரச்சனைகள் குறித்து யூடியூப்பில் பேசி வந்தார். அதோடு இணையதள பக்கத்திலும் எழுதி வந்தார்.
பறந்த வார்னிங்.. சரியா மோடி வர நேரம் பார்த்து இப்படியா நடக்கணும்? கையை பிசையும் பாஜக.. என்னாச்சு?
சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு
இதற்கிடையே தான் சவுக்கு சங்கர் நீதிமன்றம், நீதிபதிகள் பற்றி சில கருத்துகளை விமர்சனமாக வைத்தார். இதனால் சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் சவுக்கு சங்கருக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்தார். இதையடுத்து கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
6 மாத சிறை தண்டனை
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த உத்தரவு செப்டம்பர் 15ல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் உண்ணாவிரதம்
தற்போது கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் உள்ளார். சிறையில் இருந்தபோது அவரை அதிகமானவர்கள் சென்று பார்த்தனர். இதையடுத்து சவுக்கு சங்கரை பார்க்க பார்வையாளர்களுக்கு சில வாரங்கள் வரை சிறை நிர்வாகம் தடை விதித்தது. இதன்மூலம் அவரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
இதற்கிடையே தான் சிறை தண்டனை தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது நீண்டகாலம் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு ரத்து
இந்த வழக்கை நீதிபதிகள் இன்று விசாரித்தனர். வழக்கு ரத்து நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைகள் பற்றி சவுக்கு சங்கர் கருத்து சொல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் சவுக்கு சங்கருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.